Saturday, November 29, 2014

சில படகுகள் நீரில் மிதக்கவில்லை .



கடலில் இருந்து
நினைவுகளின் ஆழத்தில்
வெகு தூரம்
பின்னோக்கி நகர்ந்து
நாம்  நதியாய்
பயணித்தால் ...

ஞாபகப்  பாறைகளில்
நினைவு அலைகள்
முட்டி மோதி
நுரை மனதாய்
ஒரு கணம் நின்றால்  ..


அவை அழகிய
நிலாக் காலங்கள் !

முதல் நாள்
பள்ளிக் கூட
ஸ்லேட்டு , பை
புது வாசனைகள் தொடங்கி ..
எத்தனை எத்தனை 
அநுபவப் பூக்கள்   ? 


அது ஒரு 
மழைக் காலம் 

பார்க்கும் பெண்ணெல்லாம் 
அழகிய கேள்விகளாய்
மனசுக்குள் பிராண்டும்  
வயதின் குடைக் காளான்கள்
எத்தனை  எத்தனை ?


அது ஒரு 
கனா காலம் 

தேடிய வேலைகள் 
உதறித் தள்ளியபோது 
பசித்த புலியாய் 
பூமியில் வலம் வந்த 
வலிக்கும் கனவுகளை 
சுமந்த காலம் !


அது ஒரு 
வசந்த காலம் 

இவளா இவளேதானா 
என் மனைவி ?
என்ற  பிரபஞ்ச சிலிர்ப்பில் 
கல்யாண வாழ்வில் 
கரைந்து போன போது 
வாசல் பூக்கள் 
வரவேற்ப்பில் மகிழ்ந்த காலம்  !


அது ஒரு 
தேடல் காலம்

படிக்க வேண்டிய 
புத்தகங்கள் - தேட 
வேண்டிய திசைகள் 
ஆயுளைக் கூட்டி கொள்ள 
மனு செய்த 
அப்பாவி மனசின் காலமது  !



இது ஒரு 
நினைவுக் காலம் 

வெகுதூரம் கடந்து 
விடியாத இரவுகளாய்
கொடுத்த வாக்குகளை 
நிறைவேற்ற  இனிய 
நினைவுகளோடு 
 மிதக்கும் காலமிது !






No comments:

Post a Comment